புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

puthu kavithai thotramum valarchiyum in tamil

இந்த பதிவில் “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை” பதிவை காணலாம்.

சமுதாயத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் புதுக்கவிதையின் பாடுபொருள்களாகும்.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • புதுக்கவிதைக்கான இலக்கணம்
  • புதுக்கவிதையின் தோற்றம்
  • புதுக்கவிதையின் வளர்ச்சி
  • புதுக்கவிதைகளின் பொருள் நயம்
  • முடிவுரை

முன்னுரை

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்றுவரை மரபுக்கவிதை எனும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் தாங்கி ஊர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல வடிவங்களைக் கையாண்டனர். இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதைகளாக மாறிய சூழலை இக்கட்டுரையானது எடுத்துரைக்கிறது.

புதுக்கவிதைக்கான இலக்கணம்

புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை “விருந்து” எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று உரைத்தார் நன்னூலார்.

“இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி, இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை” எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைத்தார் கவிஞர் மு.மேத்தா.

புதுக்கவிதையின் தோற்றம்

புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களுக்கு மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.

ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு “புதிதாக்கு” என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.

“சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார் பாரதி பிரான்சின் போதலேர், ரிம்போ மல்லார்மே, ஜேர்மனியின் ரில்கே, இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு போன்றோரின் முயற்சியால் புதுக்கவிதை பிறந்தது.

தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் “வசன கவிதை” என்றும் பின்னர் “சுயேச்சா கவிதை”, “லகு கவிதை”, விடுநிலைப்பா” என்றும் “கட்டிலடங்காக் கவிதை” என்றும் அதன் பின்னர் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதையின் வளர்ச்சி

வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போல தமிழிலும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை” என்பதாகும்.

பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் போன்றோர் புதுக்கவிதைப் படைத்து தமிழ்ப் புதுக்கவிதைகளை வளர்த்தனர். புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள் வருமாறு,

  1. மணிக் கொடிக் காலம்
  2. எழுத்துக் காலம்
  3. வானம்பாடிக் காலம்

போன்றனவாகும். மேற்கூறிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக் கவிதைத்துறைக்குப் பொலிவூட்டின. முதலில் மணிக்கொடிக் காலம் பற்றி நோக்குவோம்.

மணிக்கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி சூறாவளி, காலமோகினி, கிராம ஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டு வந்தன.

இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர். இக்காலத்தில் புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியம், புதுமைபித்தன் போன்றோர் மணிக்கொடிக் காலத்து கதாநாயகர்களாக விளங்கினர்.

எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற போன்ற இதழ்கள் எழுத்து காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன. ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம் எழுத்து இதழில் தொடர்ந்தது.

மயன், சிட்டி, வல்லிக்கண்ணன் ஆகியோர் ஒன்று சேர்ந்து இக்காலத்தில் புதுக்கவிதைக்கு சிறப்பு சேர்த்தனர்.

வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் வானம்பாடிக் காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிடப்பட்டன. புவியரசு, முல்லை ஆதவன், அக்கினி புத்திரன், சிற்பி, தமிழ்நாடன், சக்திகனல், ரவீந்திரன், தமிழன்பன் ஆகியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்.

புதுக்கவிதைகளின் பொருள் நயம்

புதுக்கவிதைகளின் பாடுபொருள் இது என்று இல்லை. சமுதாயத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் புதுக்கவிதையின் பாடுபொருள்களாகும். “நல்ல காலம் வருகுது உன் கையிலா கடிகாரம்?” போன்ற வரிகள் புதுக்கவிதைக்கானச் சான்றுகளாகும்.

முடிவுரை

“மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது” என்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக் கூறலாம். தமிழில் பாரதியால் தொடங்கி வைக்கப்பட்ட புதுக்கவிதை மரபு இன்று பல நிலைகளில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

You May Also Like:
தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை
உலக இளைஞர் திறன் தினம் கட்டுரை