காடு செழித்தால் நாடு செழிக்கும் என்ற வாக்கிற்கிணங்க விண்ணில் தவழ்ந்து செல்லும் கார்முகில் கூட்டத்தை மண்ணில் மழையாய் பொழியச் செய்வன மரங்களே. இந்த மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகின்றது.
தமிழில் பல பெயர்களால் காடுகள் அழைக்கப்படுகின்றன. வனம், அடவி, புறவி, பொதும்பு, கானகம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. உயிர்க் கோளத்தின் முக்கிய அம்சமாகக் காடுகளே விளங்குகின்றன.
காட்டு வளம் காப்போம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காடுகளின் பயன்கள்
- காடுகள் அழிக்கப்படுவதற்கான காரணங்கள்
- காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
- காடுகளைப் பாதுகாக்கும் வழிகள்
- முடிவுரை
முன்னுரை
காடுகள் நாட்டின் அரண் ஆகும். அக்காடுகளைக் காப்பதற்கு அரசு அரும்பாடுபட்டு வருகின்றது. காடுகளின் பலன்களை அறிந்து நம் அரசு அரசுவனத்துறை பாதுகாப்பு என்ற ஒரு பிரிவை நியமித்துள்ளது. காட்டுவளம் என்பது ஒரு நாட்டினுடைய முக்கியான வளமாகும் இதை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
காடுகளின் பயன்கள்
காடுகளால் கிடைக்கும் நற்பயன்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல பயன்கள் கிடைக்கின்றன. காடுகளினால் நமக்கு கிடைக்கும் பலன்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துகின்றன, மண்ணரிப்பைத் தடுக்கின்றன.
நாம் சுவாசிக்கும் உயிர் வாயுவை தருகின்றன. மேலும் உலகின் சமநிலையை பேணுகின்றது. உலகில் வாழும் உயிரினங்களுக்குக் காடுகள் உறைவிடமாக விளங்குகின்றன. (வெப்ப மண்டலக் காடுகள் உலகில் வாழ்கின்ற 50% உயிரினங்களுக்கு உறைவிடமாகின்றது)
காடுகள் அழிக்கப்படுவதற்கான காரணங்கள்
காடுகள் பல்வேறு வகையான காரணங்களுக்காக அழிக்கப்படுகின்றமையைக் காண முடிகின்றது. நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கள்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது, குடியிருப்புக்களை உருவாக்குவதற்கு, மரத் தளபாடங்கள் மற்றும், மரப் பொருட்கள் சார்ந்த தேவைகளுக்கு, தொழிற்துறை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக எனப் பல காரணங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுகின்றன.
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
விறகுக்காகவும், ஏனைய மரப் பொருட்களை உருவாக்கவும் நாம் வெட்டி அழிக்கும் காடுகள் இன்றும் தொடர்கின்றன.
காடுகள் அழிக்கப்படுவதால் பெரும் வெள்ளம், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிர்களின் அழிவு, அருகி வரும் சிற்றினங்கள் முற்றிலுமாக அழிதல், உயிர் புவி சுழற்சியில் சமமற்ற நிலை, பருவ நிலைகளில் மாற்றம், பாலைவனமாதல் போன்ற சூற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்டாகின்றன.
அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளே கார்மேகங்களைக் குளிர்வித்து மழையாய் பொழிய செய்கின்றன.
மழை பொழியாவிட்டால் நாட்டின் வறட்சி, பஞ்சம், குடிநீர் தட்டுப்பாடு, தானியங்கள் விளையாமை, அரிய வகை மூலிகைகள் அழிக்கப்படுகின்றமை எனப் பல விளைவுகள் ஏற்படும்.
காடுகளைப் பாதுகாக்கும் வழிகள்
பல வகைகளில் உலக உயிர்களை வாழ வைக்கும் காடுகளின் பாதுகாப்பை குறித்து நாம் அறிய வேண்டியது அவசியம் ஆகும்.
நமக்கு அரண் போன்று விளங்கும் காடுகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும். மரங்களை வெட்டாமல் தடுப்பதும், மீறுபவர்களுக்கு தண்டனைகளை அதிகப்படுத்துவதும் அவசியமாகும். மர விதைகளை வான் வழியே தூவி, புதிய காடுகளை உருவாக்கலாம்.
முடிவுரை
உலகையே பாதுகாக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாப்பது அவசியம் ஆகும். ஒரு மரத்தை வெட்டினால் இரண்டு மரங்களை நாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மரங்களை வளர்த்து நமது வருங்கால தலைமுறையினை நலமுடன் வாழ வைப்போம். நல்ல காற்றையும், மழையையும், உணவையும் தந்து எல்லா உயிர்களையும் வாழ வைக்கும் காடுகளை காப்போம்.
You May Also Like: