நேர்மை பற்றிய கட்டுரை

Nermai Katturai In Tamil

இந்த பதிவில் மனித குலத்தின் ஆகச்சிறந்த பண்புகளில் ஒன்றான “நேர்மை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

நேர்மை என்னும் உயரிய குணமானது உயரிய வாழ்வினை அடைய வழிவகுக்கும். வெற்றியின் ரகசியம் நேர்மையாகும். எனவே நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியை அடையலாம்.

நேர்மை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நேர்மை முன்னேற்றத்திற்கு வழி
  3. நேர்மையின் சிறப்பு
  4. நேர்மையாக வாழ்ந்தவர்கள்
  5. நேர்மையின் இன்றைய நிலை
  6. முடிவுரை

முன்னுரை

“செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து” என்கின்றார் வள்ளுவர். அதாவது நேர்மையாக வாழும் ஒருவனுடைய செயல்கள் அவர் மறைந்தாலும் கூட அழியாது நின்று அவரது பரம்பரையையும் காத்து நிற்கும் என்கின்றார்.

எனவே மனித குலத்தின் ஆகச்சிறந்த பண்புகளில் ஒன்றான நேர்மை என்றென்றும் இருத்தல் அவசியமாகும். ஆனால் இன்று நேர்மையில்லாமல் இருக்கும் மனிதர்களை நம் சமுதாயத்தில் அதிகம் காணக் கூடியதாக உள்ளது.

நேர்மையான வழியில் வாழ்வதில் சிரமம் இருக்கத்தான் செய்யும் எனினும் மனதில் துணிவுடன் இருந்தால் நேர்மையாக வாழ்ந்து முன்னேற்றத்திற்கு வழி காணலாம். நேர்மை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நேர்மை முன்னேற்றத்திற்கு வழி

முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருப்பின் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாது நேர்மையாக வாழும் போது வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.

உடலும் மனதும் தூய்மையாக இருப்பின் நாம் நினைக்கின்ற எந்த நற்காரியங்களையும் செய்து முடிக்கும் வலிமையும்⸴ வழியும் தானாகவே பிறக்கும். நேர்மை என்ற விளக்கானது தன்னை மட்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை. தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் வழிப்படுத்தும்.

தனக்கு உண்மையாக இருப்பது உன்னதம். தன்னை நேசிப்பவரிடத்தில் நேர்மையாக இருப்பது மகத்துவம்.

நேர்மையின் சிறப்பு

நேர்மை எங்கு எவரிடம் காணப்படுகின்றதோ அங்கு மதிப்பும்⸴ மரியாதையும் இருக்கும்.நேர்மையான உணர்வுகளைக் கொண்டவர்கள் காலம் கடந்தும் போற்றுதற்குரியவர்.

நேர்மை என்னும் உயரிய குணமானது உயரிய வாழ்வினை அடைய வழிவகுக்கும். நேர்மையாக நடந்து கொள்ளும் ஒரு மனிதர் சமூகத்தில் என்றென்றும் நம்பிக்கைக்குரியவராக இருப்பார். “நேர்மையானவர்” “நேர்மையான மனிதர்” என்றெல்லாம் அழைக்கப்படுவர். வெற்றியின் ரகசியம் நேர்மையாகும். எனவே நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியை அடையலாம்.

நேர்மையாக வாழ்ந்தவர்கள்

உலகின் பல மனிதர்கள் நேர்மையாக வாழ்ந்துள்ளனர். சிலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

உலகின் பல மனிதர்கள் வாழ்கின்ற போதிலும் தனித்துவமாக ஒரு சிலர் தெரிகின்றனர் என்றால் அதன் முக்கிய காரணங்களில் ஒன்று அவர்கள் நேர்மையை கடைப்பிடித்து இருப்பார்கள் என்பதனாலேயாகும்.இவர்களுள் மகாத்மா காந்தி⸴ டாக்டர் அம்பேத்கர்⸴ ஏ.பி.ஜே அப்துல் கலாம்⸴ சுவாமி விவேகானந்தர்⸴ நேரு⸴ காமராஜர் போன்றவர்களைக் கூறலாம். “

உண்மையும்⸴ நேர்மையும் இருந்தால் தான் அஞ்சாநெஞ்சம் உடையவர்களாக இருக்க முடியும்” என்றார் நேதாஜி. இவர்களின் பெயர்களை இன்றுவரை உச்சரித்துக் கொண்டு இருக்கின்றோம் என்றால் அது அவர்கள் வாழ்ந்த நேர்மையான வாழ்க்கையும்⸴ தியாகமும்⸴ அர்ப்பணிப்புக்களாலுமேயாகும்.

நேர்மையின் இன்றைய நிலை

இன்றைய காலத்தில் நேர்மையான மனிதர்களையும் நேர்மை பண்பையும் காண்பது அரிது. எங்கு நோக்கினும் ஊழல்⸴ முறைகேடு⸴ ஏமாற்றம் போன்ற எண்ணிலடங்கா நேர்மைக்கு விரோத செயல்கள் மலிந்து கிடக்கின்றன.

நமது நாட்டில் அரசு துறைகளில் நடக்கும் ஊழல்கள்⸴ முறைகேடுகள் என்பவற்றை தடுத்துநிறுத்த முடியவில்லை. காரணம் மேல்நிலை ஊழியர்கள் தொடக்கம் சாதாரண ஊழியர்கள் வரை இருக்கும் நேர்மையற்ற மனிதர்களாலேயாகும்.

ஒழுக்கம்⸴ நேர்மையுடைய மனிதர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இன்று தீமையை எதிர்த்து சண்டையிடுபவர்கள் அரிது. ஏனெனில் அதனால் வெற்றியை விட அவர்களுக்கு அவமானமே மிஞ்சும்.

நேர்மையாக இருந்தவர்களுக்கு நெருக்கடி⸴ அச்சுறுத்தல் கொடுக்கப்படுகின்றது. நேர்மை உறங்கும் போது அநியாயம் விழித்தெழும் என்பதுதான் காலம் காட்டும் உண்மையாகும்.

முடிவுரை

நேர்மையற்ற வாழ்க்கை அழிவையே தரும். நேர்மையான வாழ்க்கை ஆனந்தத்தை பெற்றுத் தரும். எச்சந்தர்ப்பத்திலும்⸴ எந்த நேரத்திலும் நேர்மையைக் கைவிடாது வாழ்வில் கடைபிடித்து உயர்வோமாக!

You May Also Like:

புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை