நோன்பு பற்றிய கட்டுரை

இந்த பதிவில் “நோன்பு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

நோன்பானது மிகவும் புனிதம் மிக்கது பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது. சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைக்க வல்லது.

நோன்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. எற்காக நோன்பு நோக்க வேண்டும்
  3. நோன்பின் மகிமை
  4. றமலான் நோன்பு
  5. நோன்பின் நன்மைகள்
  6. முடிவுரை

முன்னுரை

நோன்பு என்பது எல்லா சமூக மக்களுக்கும் பொதுவான ஒன்றுதான், இஸ்லாமில் மட்டுமல்லாமல், இந்து, கிறிஸ்தவ மதங்களிலும் கூட விரதம் இருக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

மதங்களைப் பொறுத்தவரை விரதம் இருப்பதை உபவாசம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். இதற்கு இறைவனுக்கு சமீபமாக இருப்பது என்பது பொருள்.

அதன் அடிப்படையில்தான் பௌர்ணமி, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை, சஷ்டி உள்ளிட்ட நாள்களில் விரதம் இருப்பது இறைவனுக்கு உகந்தது என்று கருதி இந்துக்கள் அந்த நாட்களில் விரதம் இருந்தும் வருகிறார்கள்.

இதே போல் முஸ்லீம்கள் றமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினத்திற்கு முன் 40 நாட்கள் நோன்பு மேற்கொள்ளுவர்.

இப்படி, பெரும்பாலான மதங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை உணவு உண்ணாமல் இருக்கும் விரத முறையாகும். இக்கட்டுரையில் நோன்பு பற்றி நோக்கலாம்.

எற்காக நோன்பு நோக்க வேண்டும்

அன்னத்தை அடக்கியவன் ஐந்தை அடக்குவான் என்பார்கள். அதாவது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் அடக்குவான் என்பர். இவைகளை கட்டுப்படுத்தும் போது நம் மனம் ஞானத்தைத் தேடிச் செல்கின்றது என்கின்றதனை தத்துவ ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.

மேலும் பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்றும் சிலர் கருதுகிறார்கள். இறைவனை அடைவதற்கான வழியெனவும் சிலர் கருதுகின்றனர்.

நோன்பின் மகிமை

நோன்பானது மிகவும் புனிதம் மிக்கது பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது. சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைக்க வல்லது.

சுய கட்டுப்பாட்டுடன் நாம் வாழக்கற்றுக் கொள்வது. என பல்வேறு படிப்பினைகளை கற்றுத்தருவது தான் இப்புனித நோன்பு.

றமலான் நோன்பு

அரபி மொழியில் நோன்பு “ஸவ்மு” எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும். முசுலீம் மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாம் சந்திரமான மாதமாகும். அதுதான் நோன்பு நோற்கும் மாதம்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமும் அதுதான். அந்த மாதம் முழுமையும் முஸ்லீம்கள் நோன்பு நோற்க வேண்டும்.

சூரியோதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உணவும் பானமும் அகற்றப்பட்டு, ஒவ்வொரு நாளும் தொழுகையிலும், புனிதமான எண்ணங்களிலும் அர்ப்பணிக்க வேண்டும்.

மேலும், இதே ரமலான் மாதம் ஜகாத் – பித்ரா முதலிய தானங்கள் செய்யும் மாதமாகும்.

நோன்பின் நன்மைகள்

நோன்பால் மனதையும் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்து தீய செயல்களிலிருந்து விலகி செல்ல அது வழிவகுக்கிறது. மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். கோபத்தை அடக்க வல்லது.

ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும். உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, விரதம் மேற்கொள்வதால் அது சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளை நீக்கிவிடும்.

மேலும், உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தம் தூய்மையடையும்.

ஏனென்றால், உணவு உண்ணாதபோது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கின்றன.

முடிவுரை

பொதுவாக அனைத்து மதங்களும் நோன்பை உடலையும் மனதையும் செம்மைப்படுத்தும் விடயமாகவே பார்ப்பதை காணலாம். எனவே நோன்பின் மாண்பைப் பற்றி நாமும் தெரிந்து அதன் மகிமையை பிறருக்கும் உணர்த்த வேண்டும்.

You May Also Like:
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை
அறம் பற்றிய கட்டுரை