மத நல்லிணக்கம் கட்டுரை

matha nallinakkam katturai in tamil

இந்த பதிவில் சமூக மற்றும் நாட்டு வளர்ச்சிக்கு உதவும் “மத நல்லிணக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

தன் சக்திக்கு மேலாக செயற்படும் சக்தி ஒன்று இருப்பதை மனிதன் உணர்ந்ததன் விளைவாகவே மதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத நல்லிணக்கம் கட்டுரை

மத நல்லிணக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மதப்பல்வகைமை
  • மத நல்லிணக்கம்
  • மத நல்லிணக்கத்தை பாதிக்கும் காரணிகள்
  • விளைவுகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதன் தோன்றிய காலம் தொட்டே மதங்களும் தோன்றியுள்ளன. தன் சக்திக்கு மேலாக செயற்படும் சக்தி ஒன்று இருப்பதை மனிதன் உணர்ந்ததன் விளைவாகவே மதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த சக்தி கடவுள் எனவும் அக்கடவுளே மனிதனை படைத்ததாகவும் சில மதங்கள் குறிப்பிடுகின்றன. இந்த உலகில் பல்வேறு மரபு, கலாசாரங்களை கொண்ட மனித இனத்தினர் வாழ்கின்றனர்.

அவர்கள் தமது மரபு மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப பல மதங்களாக பிரிந்துள்ளனர். அம்மதப்பிரிவுகளுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பாக இக்கட்டுரை விளக்குகின்றது.

மதப்பல்வகைமை

உலகில் ஆயிரக்கணக்கான மதங்கள் இருப்பதாக அறியப்பட்டிருந்தாலும் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், இந்து சமயம் போன்ற மதங்கள் பிரதானமானவையாகவும் அதிக அளவில் உலக மக்களால் பின்பற்றப்படுபவையாகவும் காணப்படுகின்றன.

இந்த மதங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட கடவுள்களையும், வேறுபட்ட நம்பிக்கைகளையும் வேறுபட்ட வழிபாட்டு முறைகளையும் கொண்டவையாக உள்ளன.

மத நல்லிணக்கம்

உலகில் பல மதங்கள் காணப்பட்டாலும் கூட அவை இடம் சார் ரீதியாக கலப்படைந்த முறையில் பரவிக் காணப்படுகின்றன. உதாரணமாக ஆசியாவை பிறப்பிடமாக கொண்ட இந்து சமயம் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றமையினை குறிப்பிடலாம்.

ஒரு நாட்டில் பல மதங்கள் இருந்தாலும் அங்கு அனைத்து மதத்தவரும் தமது விருப்பப்படி வழிபாடு செய்வதற்கு உரிமை வழங்கப்படுதல் வேண்டும். பிற மதங்களையும் தம் மதம் போல மதிப்பளிக்க வேண்டும்.

அவற்றை வெறுக்கவோ எதிர்க்கவோ கூடாது. இத்தைகைய விடயங்கள் பல மதம் சார் ஒரு தேசத்தில் காணப்படுமாயின் அதுவே மத நல்லிணக்கம் எனப்படும்.

மத நல்லிணக்கத்தை பாதிக்கும் காரணிகள்

தற்காலத்தில் ஒரு சிலர் மாத்திரம் தமது அரசியல் பொருளாதார இலாபத்திற்காக மத நல்லிணக்கத்தை பாதிப்படைய செய்வதை காணக் கூடியதாக உள்ளது.

குறிப்பாக மதங்களின் பெயரில் அரசியல் கட்சிகளை நடாத்துதல், பிற மதங்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை தூண்டி அதன் மூலம் வாக்குகளை பெற முயற்சித்தல்.

மத கலவரங்களை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த மதத்தவர்களையும் காரணம் காட்டுதல் போன்றவை மத நல்லிணக்கத்தை பாதிக்கின்றன.

விளைவுகள்

மத நல்லிணக்கம் இன்மையால் ஒட்டு மொத்த தேசமுமே பாதிப்படைகின்றது. உதாரணமாக குறிப்பிட்ட மதத்தவர்களை வெறுக்கின்ற போது அவர்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படுகின்றமையினால் மதக்கலவரங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இதனால் பொதுச் சொத்துக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. உயிர்ச்சேதங்கள் கூட ஏற்படுகின்றன.

மேலும் நாடு கடத்தப்படல், அகதிகளாக்கப்படல் போன்ற துயர சம்பவங்களும் ஏற்படுகின்றன.

இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற எண்ணக்கரு பாதிப்படைந்து ஒட்டு மொத்த தேசத்தினுடைய வளர்ச்சியுமே தடைப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

முடிவுரை

மதங்கள் பல வகையாக இருந்தாலும் அவை கூறும் கருத்துக்கள் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதே ஆகும். இதனை சிறுவயது முதலே நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து மதங்களும் சமம் என்ற எண்ணத்தினை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.

ஒவ்வொரு மதத்திலும் கூறப்படக்கூடிய நல்ல கருத்துக்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதன்படி ஒழுகினால் மாத்திரமே இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ முடியும்.

You May Also Like :
மதம் பற்றிய கட்டுரை
கருணை பற்றிய கட்டுரை