இயற்கையை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு கட்டுரை

iyarkai pathukappu katturai in tamil

இந்த பதிவில் “இயற்கையை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றை சமூகம் செய்து கொண்டிருக்கின்ற பாரதூரமான தவறு இயற்கையினை அழித்தல் ஆகும்.

இயற்கையை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு கட்டுரை

இயற்கையை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கையின் அவசியம்
  • சூழல்சார் கல்வி
  • சூழல் மாசடைதல்
  • மாணவர்களின் பொறுப்பு
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகம் இயற்கை அரண் அமைக்கப்பட்ட சுவர்க்கம் என்றே கூறலாம். இயற்கையின் அரவணைப்பில் தான் மனிதர்களும் பிற விலங்குகளும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

எமக்கு உண்ண உணவும், குடிக்க தண்ணீரும், சுவாசிக்க காற்றையும், தங்க மர நிழலையும் தந்து பாதுகாப்பது இந்த இயற்கை ஆதலால் நாம் இயற்கையினை பாதுகாத்து அதற்கு இசைவாக இங்கே வாழ வேண்டும்.

இக்கட்டுரையில் இயற்கையினை பாதுகாக்கும் பொறுப்பில் மாணவர்களது பங்கு பற்றி நோக்கலாம்.

இயற்கையின் அவசியம்

இயற்கையின் அவசியம் புரியாமல் யாரும் இங்கு இருக்க முடியாது. மழை பெய்ய வேண்டும், காற்று வீச வேண்டும், இரவும் பகலும் மாறி மாறி வர வேண்டும். இந்த இயற்கையின் செயன்முறைகள் எண்ணற்றவை இவற்றில் சிறு குழப்பம் ஏற்பட்டாலும் பாரிய விபரீதங்கள் தோன்றும்.

மனிதனுடைய வாழ்வு முழுக்க முழுக்க இயற்கையினை சார்ந்தே உள்ளது. இந்த சமநிலை சீராக இருப்பதனால் தான் இங்குள்ள அனைவரும் நிம்மதியாக வாழ முடிகிறது.

இயற்கையே மனிதனை தோற்றுவிக்கின்றது ஆனால் மனிதனால் இயற்கையை தோற்றுவிக்க முடியாது இதன் மூலம் இதன் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும்.

சூழல் சார் கல்வி

கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிகம் சூழல் நேயம் இருக்க வேண்டும். பாடசாலை காலங்களில் புவியியல், சுற்றாடல் கல்வி, சூழலிலயல் தொடர்பான பாடங்கள் மாணவர்களுக்கு இயற்கை சூழல் தொடர்பான புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது.

இவற்றின் வாயிலாக இயற்கையின் அவசியம், அதனை எவ்வாறு நாம் பாதுகாக்கலாம், அவை மாசாக்கப்படுவதனால் ஏற்படும் தீமைகள் போன்ற விடயங்களை மாணவர்கள் கற்று கொள்ள முடிவதுடன் சூழலை பாதுகாக்கின்ற முற்போக்கு சிந்தனைகள் அவர்கள் மனதில் எழுகின்றன.

சூழல் மாசடைதல்

இன்றைய காலத்தில் மனித சனத்தொகையானது அதிகரித்து வருவதனால் உலகமெங்கும் பல சுற்றுச்சூழல் மாசடைவுகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது.

குப்பைகள் மற்றும் கழிவுகளால் தரை மற்றும் நீர் சூழல் மாசடைவுகளும் காபன் மற்றும் நச்சு வாயுக்களின் வெளியேற்றத்தால் வளிமண்டல மாசடைவுகளும் அதிகம் இடம் பெறுகின்றன.

மேலும் புவி வெப்பமடைதல், கடல்மட்டம் உயருதல், காலநிலை மாற்றம், துருவங்கள் உருகுதல் போன்ற பல அசாதாரண மாற்றங்கள் இடம்பெற இந்த சுற்றுச்சூழல் மாசடைவுகளே பிரதான காரணமாக உள்ளன.

இவற்றின் விளைவுகளால் தான் உலக மக்கள் இன்று பல அனர்த்தங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் பொறுப்பு

இவ்வாறான அசாதாரண நிலைகளில் சமூகத்தில் மாணவர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. காரணம் பொதுமக்களை விடவும் மாணவர்களுக்கு சூழல்சார் அறிவு அதிகமாகும் அதன் அவசியமும் நன்கு தெரியும்.

ஆகவே பொது மக்களை விழிப்படைய செய்யவும் சூழலை பாதுகாக்க முற்போக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவதனால் சமூக மாற்றம் இலகுவாக ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

முடிவுரை

இன்றை சமூகம் செய்து கொண்டிருக்கின்ற பாரதூரமான தவறு இயற்கையினை அழித்தல் ஆகும். இதற்கான விளைவுகளை உடனுக்குடன் அனைவரும் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

இந்த அழகான பூமியை நாம் பாதுகாத்து நமது அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருப்பதனால் நாம் சிந்தித்து செயற்பட்டு இயற்கையினை பாதுகாத்து எதிர்காலத்தை வளமானதாக ஆக்குவோம்.

You May Also Like :
இயற்கை பாதுகாப்பு கட்டுரை
இயற்கையின் நன்மைகள் கட்டுரை