சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

Sutru Sulal Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் இன்றைய உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த பூமியில் உயிர்கள் நிலைத்து வாழ வேண்டும் என்றால் சுற்றுச் சூழல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. நிலம்
  3. நீர்
  4. காற்று
  5. சூழல் பாதுகாப்பு வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

“நாட்டின் தூய்மை நமக்கெல்லாம் பெருமைˮ⸴ “சுத்தம் சோறு போடும்ˮ என்பது சுத்தம் பற்றிய பழமொழிகளாகும்.

மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் புவி மண்டலம் ஆகும். சுற்றுச்சூழல் என்பது ஓர் உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சூழவுள்ள உயிருள்ள மற்றும்⸴ உயிரற்ற கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது.

நாம் எப்போதும் இத்தகைய சுற்றுச்சூழல் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். சூழலானது முன்பு போல் இல்லாமல் தற்காலத்தில் அதிகம் மாசுபட்டுள்ளது. இத்தகைய நிலைக்குக் காரணம் நாம் அனைவருமே.

நிலம்⸴ நீர்⸴ காற்று⸴ வளி என அனைத்தும் நம்மால் மாசுபடுத்தப்படுகின்றது. இதனால் பல பிரச்சனைகளை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே சுற்றுச் சூழல் பாதுகாப்பு அவசியமான ஒன்றாகும். இதனை இக்கட்டுரையில் காண்போம்.

நிலம்

“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலˮ என்பதற்கிணங்க தோண்டத் தோண்ட வளங்களைக் கொடுக்கும் இம்மண்ணில் தாவர இனங்கள் மட்டுமின்றி பல நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.

ஆனால் மண்ணுக்குக் கெடுதல் செய்கின்றோம். நவீனமயமாக்கலானால் பல கெடுதலை விளைவிக்கும் கழிவுகள்⸴ கட்டடக் கழிவுகள் முதலானவற்றை மண்ணுக்குள் போட்டு அங்குள்ள மேல் மண்ணை உரமற்றதாக்குகின்றோம்.

நீர்

“நீரின்றி அமையாது உலகுˮ என்பார்கள். உலகுக்கு முக்கியமான நீரானது இன்று பல மாசடைவினைச் சந்தித்து வருகின்றது. ஏரிகள்⸴ குளங்கள்⸴ கால்வாய்கள் எனப் பலவிதமான நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இவை வீடுகளாகவும்⸴ கட்டடங்களாகவும் மாறியுள்ளன.

ஆறுகள் எல்லாம் தொழிற்சாலைக் கழிவு நீர்க் கால்வாய்களாகவும், கடல் ஒரு மாபெரும் குப்பைத் தொட்டியாகவும் மாறி நீர் வாழ் உயிர்கள் மடிவதற்கு காரணமாகின்றன.

காற்று

நவீனமயமாதலே காற்று மாசுபட முக்கிய காரணமாகும். தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான எரிபொருள் பயன்பாடு காற்றை மாசுபடுத்தி சுவாசப் பிரச்சினை உட்பட பல நோய்களையும் கொடுக்கின்றன.

அதுமட்டுமன்றி அமிலமழை⸴ ஓசோனில் ஓட்டை என பல பயங்கரமான ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. காற்றை சுத்தப்படுத்தும் காடுகளை அழிப்பதனால் இந்த ஆபத்துக்களை சந்திக்க வேண்டியுள்ளது.

சூழல் பாதுகாப்பு வழிமுறைகள்

மனிதனால் மாசுபாடுக்குட்படுத்தப்பட்ட சூழலை மனிதனே பாதுகாக்க வேண்டிய கடமையில் உள்ளான். சுற்றுச்சூழலைப் பாதுகாத்துக்கொள்ள ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.

மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பற்றிய கருத்தரங்குகள்⸴ பேரணிகளை நடத்தல் வேண்டும்.

நாம் வாழும் இம்மண்ணைத் தாயாக மதித்து பாதுகாக்க வேண்டும். நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் அவசியம்.

தொழிற்சாலைக் கழிவுகளை ஆறுகளில் கலக்காமல் பாதுகாக்க வேண்டும். நெகிழிக் குப்பைகளை மற்றும் கழிவுகளை கடலில் கலக்காமல் பாதுகாக்க வேண்டும். காடுகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டைப் பாதுகாக்க முடியும்.

முடிவுரை

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்ˮ என்பதற்கிணங்க நீரும் நிலமும் மலையும் காடும் சேர்ந்ததே நம் மனித வாழ்க்கைக்கு அரண் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழியாகும். சுற்றுச்சூழல் தூய்மையாக இருந்தால் தான் வாழ்க்கை சுகமாக இருக்கும். நோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும்.

இதனை அனைவரும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

மழைநீர் சேகரிப்பு கட்டுரை