இன்று மனிதனுடைய பல்வேறுபட்ட செயற்பாடுகளின் காரணமாக பேரிடர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது எனலாம். இத்தகைய பேரிடர்களின் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிப்படைகின்றனர். மேலும் பாரிய பேரிடர்களினால் பல உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன எனக் கூறமுடியும்.
பேரிடர் மேலாண்மை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பேரிடர் மேலாண்மை என்பது
- பேரிடர் மேலாண்மையின் அவசியம்
- பேரிடர்களும், அவை ஏற்படுவதற்கான காரணங்களும்
- பேரிடர் மேலாண்மையை நிர்வகிப்பதில் எதிர்நோக்கும் சவால்கள்
- முடிவுரை
முன்னுரை
இயற்கை மனிதனை நேசிப்பது போன்று மனிதனும் இயற்கையை நேசிக்க வேண்டும். அப்போது தான் பல்வேறு பேரிடர்களை தவிர்த்து வாழ முடியும். அந்த வகையில் பேரிடர்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றே ஆகும். இத்தகைய பேரிடரிலிருந்து நாம் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவே பேரிடர் மேலாண்மையானது துணை புரிகின்றது.
பேரிடர் மேலாண்மை என்பது
பேரிடர் மேலாண்மை என்பது யாதெனில் பேரழிவுகளிலிருந்து எம்மை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே பேரிடர் மேலாண்மை எனலாம்.
அதாவது அவசர நிலைகளை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
பேரிடர் மேலாண்மையானது பேரிடர்களின் தாக்கத்தை குறைப்பதன் ஊடாக அவற்றை சமாளிப்பதற்கான திறமையான வழிகளை திட்டமிடுவதை நோக்காக கொண்டதாகும். பேரிடர்கள் இயற்கையாகவும் மனிதர்களது செயற்பாட்டினாலும் ஏற்படக்கூடியதாகும்.
பேரிடர் மேலாண்மையின் அவசியம்
பேரிடர் மேலாண்மையினூடாக பேரிடர் ஏற்படும் முன்னர் அதனை எதிர்கொள்ளும் வகையில் மக்களை தயார் செய்வதற்கு துணைபுரிகின்றதோடு பேரிடரின் போது ஏற்படும் ஆபத்தான நிலைகளை இயன்றளவு குறைப்பதற்கும் உதவுகின்றதொரு முறைமையாகவும் இம்முறைமை அமைந்துள்ளது.
மேலும் பேரிடர் பற்றிய தெளிவினை ஏற்படுத்தி அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான நிலையினை ஏற்படுத்த பேரிடர் மேலாண்மை துணை புரிகின்றது.
பேரிடர்களும் பேரிடர் ஏற்படக் காரணங்களும்
பேரிடர் என்பது மனிதர்களுடைய வாழ்க்கையை சீர்குலைக்க கூடிய வகையில் மனிதன் அல்லது இயற்கையால் ஏற்படும் விளைவுகளாகும். சுனாமி, நிலநடுக்கம், சூறாவளி, கொரோனா என பல்வேறு பேரிடர்கள் எம்மை அழிவுக்குட்படுத்துகின்றன. இதனால் உயிரிழப்புக்கள், உடமையிழப்புக்கள், நோய்கள் என பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
பேரிடர் ஏற்படுவதற்கான காரணங்கள்
பேரிடர்கள் ஏற்படுவதற்கான பிரதானமான காரணம் சூழல் மாசடைதல் ஆகும். காடுகளை அழித்தல், பல்வேறு வாகனங்களின் புகைகள், நச்சு வாயுக்களின் வெளியீடு போன்றவற்றின் காரணமாகவே சூழல் மாசுபட்டு பல பேரிடர்கள் ஏற்படுவதனை காணமுடிகின்றது.
மேலும் உள்நாட்டு போர்களில் பயன்படுத்தப்படும் அணுசக்திகளின் பயன்பாடு, நகரமயமாக்கம் போன்ற பல்வேறுபட்ட காரணங்களினாலும் பேரிடர்கள் ஏற்படுகின்றன.
பேரிடர் மேலாண்மையை நிர்வகிப்பதில் ஏதிர்நோக்கும் சவால்கள்
ஒரு நாட்டினுடைய தொழினுட்ப வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு திறன்கள் போன்றவை போதுமானதாக காணப்படாமை மற்றும் பேரிடர் அபாய மேலாண்மையினை செயற்படுத்துவதில் மக்களிடையே திறமை இல்லாமை, பேரிடர் தவிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான போதியளவு முதலீடுகள் காணப்படாமை என பல்வேறுபட்ட காரணங்களால் பேரிடர் மேலாண்மையினை முறையாக செயற்படுத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
முடிவுரை
பேரிடர்கள் என்பது தவிர்க்க முடியாத ஒரு பேரழிவாகும் என்ற வகையில் அவை ஏற்படுவதற்கு முன்னர் அதிலிருந்து எம்மை தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளை கையாளுவதன் மூலமே எம்மை காத்து கொள்ள முடியும். அத்தோடு பேரிடர் மேலாண்மையினை சிறப்புற மேற்கொள்வதற்கு துணைநிற்பது அனைவரதும் கடமையாகும்.
You May Also Like: