திருவள்ளுவர் தினம் கட்டுரை

Thiruvalluvar THinam Katturai In Tamil

இந்த பதிவில் “திருவள்ளுவர் தினம் கட்டுரை” பதிவை காணலாம்.

திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

திருவள்ளுவர் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. திருவள்ளுவர் ஆண்டு
  3. திருக்குறளின் சிறப்புக்கள்
  4. வள்ளுவர் பிறந்த இடம்
  5. நினைவுச் சின்னங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

தெய்வப்புலவர் என்று அழைக்கப்படும் திருவள்ளுவர் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துக்களை இரண்டு அடிகளில் தந்துள்ளார். மனிதன் தான் சார்ந்துள்ள மத போதனை நூல்களுக்கு அப்பால் மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல் திருக்குறள் ஆகும்.

உலகப் பொதுமறை நூலைத்தந்த திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக மேடையில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைபெறச் செய்தவர் திருவள்ளுவர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ஜாதி, மதம், நிறம், மொழி, இனம் முதலான குறுகிய எண்ணங்களுக்கு இடம் தராமல், எவ்வகைச் சார்பையும் கடந்து, எல்லோருக்கும் பொதுவான ஒரு நூலைப் படைத்துத் தந்திருப்பது பெரிய வியப்புக்குரியதாகும்.

இதனாலேயே, திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. இக்கட்டுரையில் திருவள்ளுவர் தினம் பற்றி நோக்கலாம்.

திருவள்ளுவர் ஆண்டு

1921-ம் ஆண்டு சென்னைரப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் பலர் பிரபவ ஆண்டு முறையில் தமிழ் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு அழிவும், இழிவும் உண்டானதை நினைத்து கூடி ஆராய்ந்தனர்.

திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் எனவும், அவர் பெயரில் தொடராண்டைப் பின்பற்றுவது சாலச் சிறந்தது என்றும், அதையே தமிழாண்டு எனக் கொள்வது என்றும் முடிவுக்கு வந்தனர். இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

திருவள்ளுவரின் காலம் கி.மு. 31. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.

திருக்குறளின் சிறப்புக்கள்

உலகப் பொதுமறை எனச் சிறப்பிக்கப்படும் திருக்குறலில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளது. திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல்.

தமிழில் மிகச் சில சொற்களிலான கவிதை வடிவம் குறள் வெண்பா ஆகும். மிக விரிந்த உலகச் சிந்தனைகளை மிகக் குறுகிய வடிவத்தில் தர முடியும் என்பதை உலக இலக்கிய அரங்கில் திருக்குறள் வெளிப்படுத்தியுள்ளது.

வள்ளுவர் பிறந்த இடம்

வள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்புச் சான்றுகள் எதுவுமே இல்லை. எனினும், அவர் மதுரையில் பிறந்தார் என்றும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

மேலும், ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இவை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

நினைவுச் சின்னங்கள்

தமிழக அரசால் இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், திருவள்ளுவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக பிரம்மாண்டமான சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குரல் மண்டபத்தில் அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், பொறிக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

திருக்குறள் கூறாத அறக்கருத்து என்று எதுவுமில்லை எனக் கூறுமளவிற்கு வாழ்விற்குத் தேவையான அத்தனை அறக்கருத்துக்களையும் திருவள்ளுவர் திருக்குறள் மூலம் நமக்கு அளித்துள்ளார். இவ்வறக் கருத்துக்களை பின்பற்றி வாழ்வில் வளம்பெறுவோம்.

You May Also Like:
திருக்குறளின் சிறப்புகள் கட்டுரை
திருவள்ளுவர் பற்றிய கட்டுரை