திருவள்ளுவர் பற்றிய கட்டுரை

Thiruvalluvar Patri Katturai In Tamil

இந்த பதிவில் உலக பொதுமறையினை தந்த “திருவள்ளுவர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தொன்மை மொழியான தமிழ் மொழியில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன அவற்றில் திருக்குறளும் சிறப்பிடம் பெற்று வருகின்றது.

திருவள்ளுவர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பும் வாழ்வும்
  3. திருக்குறளின் சிறப்பு
  4. திருக்குறளின் உள்ளடக்கம்
  5. திருவள்ளுவர் சிலை
  6. முடிவுரை

முன்னுரை

ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் திருக்குறள் எனும் அற்புத படைப்பில் மக்களுக்கு எடுத்தியம்பியவர் தான் திருவள்ளுவர்.

உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து உலக இலக்கிய அரங்கில் தமிழ் மொழிக்கென்று உயரிய இடத்தை நிலைப்பெற செய்தவர் ஆவார்.

தொன்மை மொழியான தமிழ் மொழியில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன அவற்றில் திருக்குறளும் சிறப்பிடம் பெற்று வருகின்றது.

திருக்குறள் கூறாத தத்துவம் என்று எதுவும் இல்லை எனும் அளவிற்கு தத்துவக் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்ட உலக பொதுமறை என்ற பெருமைக்குரிய நூலாகும். இதனை எழுதிய திருவள்ளுவர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பும் வாழ்வும்

திருவள்ளுவர் பற்றிய பிறப்பு மற்றும் பிறப்பிடம் பற்றிய சரியான சான்றுகள் இல்லை. இவர் கி.மு 31ஆம் நூற்றாண்டில் பிறந்தார் என்றும்⸴ மதுரையில் பிறந்தார் என்றும்⸴ சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்றும் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

மேலும் இவர் ஆதி – பகவன் என்பவர்களுக்கு மகனாக பிறந்தார் என்று கூறப்படுகின்ற போதும் இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனினும் இவரது மனைவி வாசுகி என்று அறியப்படுகின்றார்.

திருவள்ளுவர் பொய்யாமொழிப்புலவர்⸴ முதற்பாவலர்⸴ தெய்வப்புலவர்⸴ நாயனார்⸴ செந்நாப்போதார்⸴ பெருநாவலர் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.

திருக்குறளின் சிறப்பு

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம்⸴ மொழி⸴ பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக உலகப் பொதுமறை⸴ உத்தரவேதம்⸴ உப்பால்⸴ ஈரடி நூல்⸴ தெய்வநூல்⸴ பொதுமறை⸴ பொய்யாமொழி⸴ தமிழ்மறை⸴ திருவள்ளுவம் இது போன்ற பல பெயர்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நூல் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

ஈரடியில் கூறியதால் இது ஈரடி நூல் எனவும் அழைக்கப்பட்டது. அறம்⸴ பொருள் இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால் முப்பால் என்றும் அழைக்கப்படுகின்றது.

மனிதர்கள் தம் அகவாழ்விலும் சமூகக் கூட்டு வாழ்வாலும் புற வாழ்விலும் இன்பமுடனும்⸴ நலமுடனும் வாழத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

திருக்குறளின் உள்ளடக்கம்

அறத்துப்பால்⸴ பொருட்பால்⸴ காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவான அறத்துப்பாலில் மனசாட்சி மற்றும் மரியாதை நன்னடத்தை போன்றவற்றை பாயிரவியல்⸴ இல்லறவியல்⸴ துறவறவியல்⸴ ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

இரண்டாவது பிரிவான பொருட்பாலில் உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்துகொள்வது என்பதை அரசியல்⸴ அமைச்சியல்⸴ அங்கவியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.

மூன்றாவது பிரிவான காமத்துப்பால் ஆண் பெண் உறவுகளுக்கு இடையிலான காதல் மற்றும்⸴ இன்பத்தை தெளிவாகக் களவியல்⸴ கற்பியல் என்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.

முதல் பிரிவில் 38 அதிகாரங்கள் உண்டு. இரண்டாவது பிரிவில் 70 அதிகாரங்கள்⸴ மூன்றாவது பிரிவில் 25 அதிகாரங்களும் உண்டு. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.

திருவள்ளுவர் சிலை

இந்தியாவின் தெற்கே உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசினால் அமைக்கப்பட்டது. இது 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு சிலை திறந்து வைக்கப்பட்டது.

சிலையின் உயரம் 133 அடி ஆகும். இந்த இடத்தில் உட்புறத்தில் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும்⸴ ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. சிலையின் மொத்த எடை 7000 டன் ஆகும்.

முடிவுரை

திருவள்ளுவர் மறைந்தாலும் அவர் உணகிற்கு அளித்த திருக்குறள் எனும் அற்புதப் படைப்பானது அவரின் சிறப்பினை என்றென்றும் எடுத்தியம்பும். திருக்குறளில் கூறப்பட்டுள்ள தத்துவங்களை வாழ்வில் கடைப்பிடித்து வளம் பெறுவோமாக.

காப்பியத்தின் தோற்றம் வளர்ச்சி கட்டுரை
சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை