மின் சிக்கனம் கட்டுரை

Min Sikkanam Katturai In Tamil

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத நிலையை நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த பதிவில் “மின் சிக்கனம் கட்டுரை” பதிவை காணலாம்.

மின்சார சாதனங்களின் பாவனையை சிக்கனமாக பாவிப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

மின் சிக்கனம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. அறிமுகம்
  2. மின்சாரத்தின் முக்கியத்துவம்
  3. மின் விரயம்
  4. மின் சிக்கனம் தேவை இக்கணம்
  5. மின்சாரம் விரயமாவதைத் தடுக்கும் வழிகள்
  6. முடிவுரை

அறிமுகம்

மனித வாழ்வில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலும் வீடுகளில் மின்சார இணைப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் தேவை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு இதனை சிக்கனமாக பயன்படுத்துவதும் முக்கியமானதாகும்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

மின்சாரம் இல்லையெனில் உலகமே இருளில் மூழ்கிவிடும் நிலை ஏற்படும். இதனைக் கவனத்தில் கொண்டு மின்சிக்கனத்தை கடைப்பிடிப்பது எமது கடமை ஆகும். மின்சிக்கனம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மின்சாரத்தின் முக்கியத்துவம்

எமது அன்றாட வாழ்க்கையில் தேவைகள் பலவற்றை மின்கருவிகள் பூர்த்தி செய்கின்றன. இவை இயங்குவதற்கு மின்சாரம் மிகவும் முக்கியமாகும்.

குறிப்பாக இருளை நீக்கி வெளிச்சம் தரும் மின்குமிழ்கள்⸴ பொழுதுபோக்கு சாதனமான தொலைக்காட்சி⸴ மற்றும் சமையலுக்கு உதவும் மிக்ஸி⸴ கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் பலவும் எமக்கு பெரிதும் உதவியாக உள்ளன.

இவைகள் இயங்க மின்சாரம் தேவைப்படுகிறது. மடிக்கணினிகள்⸴ கணினிகள் போன்ற சாதனங்கள் என்பனவும் வேலைத்தளங்களில் பெரிதும் உதவியாக உள்ளன. இவற்றினை பயன்படுத்துவதற்கும் மின்சாரம் முக்கியமானதாகும்.

மின் விரயம்

நாம் அன்றாடம் பல மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றோம். எமது தேவைகளுக்காகவும்⸴ நேரத்தினை மீதப்படுத்துவதற்காகவும்⸴ விரைவாக வேலைகளை செய்து முடிப்பதற்கும் மின்சாதனங்களைப் பயன்படுத்துகின்றோம்.

அவ்வாறு பயன்படுத்தும் போது பல சந்தர்ப்பங்களில் மின் விரயத்தைச் செய்கின்றோம். மின்சாதனங்களை பாவிக்கும் போது அக்கறையின்றி செயற்படுவதால் மின் விரயம் நிகழ்கின்றது.

பாவனையின் பின் ஆலைகளை நிறுத்தாமல் விடுதல்⸴ தேவையற்ற வகையில் மின் பாவனைகளைச் செய்தல்⸴ அதிகளவான மின்குமிழ்களை எரியவிடுதல் போன்ற பல சந்தர்ப்பங்களில் மின் விரயம் ஏற்படுகிறது. இதனால் மின் கட்டணம் அதிகரிப்பதுடன் மின்சாரமும் விரையம் ஆக்கப்படுகின்றது.

மின் சிக்கனம் தேவை இக்கணம்

இன்று தமிழகத்தில் பல இடங்களிலும் மின்வெட்டு தொடர்வதைக் காணலாம். இந்நிலை எதிர்கால சந்ததியினர் மத்தியிலும் தொடர விடாமல் தடுப்பது அவசியமாகும். எனவே மின் சிக்கனம் இக்கணமே தேவை.

மின்வெட்டு அதிகமாக இருக்கும் இக்காலத்திலும் தெரு விளக்குகளை சாலையில் வெளிச்சம் நன்கு ஏற்பட்ட ஒரு மணி நேரம் கழித்த பிறகும் கூட அணைக்காமல் விரயம் செய்கின்றனர்.

மேலும் அதிக மின்சாரத்தை இழுத்து ஒளியைத் தரும். சோடியம் ஆவி விளக்குகள்⸴மெர்குரி விளக்குகள்⸴ ஹலோஜன் விளக்குகள் போன்றவையே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன.

இவற்றை மாற்றி குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி(LED) பவர் விளக்குகளைப் பொருத்தி பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது 500 மெகாவாட் மின்சாரம் மீதப்படும்.

மின்சாரம் விரயமாவதைத் தடுக்கும் வழிகள்

தேவைப்படும் போது மட்டும் மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். பின் ஆளியை ஆப் செய்து கொள்ள வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்தும் போது அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகின்றது. இதனால் கூடுமானவரை குளிர்சாதனப் பெட்டியை அடிக்கடி மூடித் திறப்பது குறைத்துக்கொள்ள வேண்டும்.

மின்சார அடுப்பில் தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும். தேவையற்ற மின் குமிழ்களை ஒளிர விடாது அணைத்து விட வேண்டும்.

முடிவுரை

இன்று பலருக்கும் மின்சாரத்தின் பெறுமதி தெரிவதில்லை. எனவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது அவசியமாகும்.

மின் சிக்கனத்தின் அவசியத்தினை உணர்ந்து பொறுப்புடன் செயற்படுவது எமது கடமையாகும். மின் சிக்கனத்தினைக் கடைப்பிடிப்போம். எதிர்கால சந்ததியினரின் வாழ்வைப் பிரகாசமாக ஒளிரச் செய்வோம்.

You May Also Like:
மின்சாரம் பற்றிய கட்டுரை
மின்சார பாதுகாப்பு கட்டுரை