உலக சமூக நீதி தினம்

சமூக நீதி தினம்

உலக சமூக நீதி தினம்பிப்ரவரி 20
World Day of Social JusticeFebruary 20

பலதரப்பட்ட ஜீவராசிகள் வாழும் இப்பிரபஞ்சத்தில் நீதியெனும் ஒற்றைச் சொல்லின் மூலம் அதன் நாகரீகம் மெருகேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீதி மறுக்கப்பட்ட சமூகம் அநாகரீகத்தின் உச்சம் எனலாம்.

உலக சமூக நீதி தினம் வரலாறு

டென்மார்க்கில் 1995 ஆண்டில் சமூக மேம்பாட்டுக்கான உலக உச்சி மாநாடு நடைபெற்றது.

உச்சி மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு தலைவர்களால் வறுமை, முழு வேலை வாய்ப்பு ஆகியவற்றுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், சமூகத்திற்காக உழைக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி ஐக்கிய நாடுகளின் அமைப்பு கொண்டு வந்த தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி “உலக சமூக நீதி தினமாக” அனுசரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்பின்பு 2009-ம் ஆண்டு முதல் உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று உலக சமூக நீதி தினம் கடைப்பிடிக்கப்படு வருகின்றது.

உலக சமூக நீதி தினம் நோக்கம்

உலகில் மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உணவு, பொருளாதாரம், பாலினம், மொழி உட்பட எவ்வித பாகுபாடும் இன்றி ஒரே சமூகமாக வாழ வேண்டும் என்பதை வலியுத்தும் வகையில் உலக சமூக நீதி தினம் உருவாக்கப்பட்டது.

உலக சமூக தினத்தின் நோக்கங்களை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச தொழிலாளர் அலுவலகமும் இணைந்து செயற்படுகின்றன.

உலக சமூக நீதி தினம் முக்கியத்துவம்

சமூகத்தின் மத்தியில் சமூக நீதி என்பது இன்றியமையாததாகும். சமூக நீதி பேணப்படும் போதுதான் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், சமூகத்தின் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை களையவும் முடியும்.

சமூக நீதி இல்லாத நிலையில் சமூக வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது. ஒவ்வொருவரும் மரியாதை, அமைதி, பாதுகாப்பு போன்றவற்றை உணர்வதற்கு சமூகநீதி முக்கியத்துவம் பெறுகின்றது.

இத்தகைய சமூக நீதி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தினமாக உலக சமூக நீதி தினம் முக்கியம் பெற்று வருகின்றது. சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் பெற்று மாண்புடன் வாழ இந்நாள் இன்றியமையாததாகும்.

நாகரீகத்தின் உச்சியில் நின்று நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருனத்திலும் சமூக நீதிக்கான மறுப்புக்களெல்லாம் பரிணாம் அடைந்துள்ளன.

புதுப்புது வடிவங்களில் கொலையும், பாலியல் வன்புணர்வும், அச்சுறுத்தல்களும், மனிதவுரிமை மீறல்களும் உருமாறியிருக்கின்றன. எனவேதான் சமூக நீதியை நாகரீகமடைந்த காலத்திலும் கூட விமர்சிக்க வேண்டி ஏற்படுகின்றது.

சமூக நீதி வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சமூக சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அனைவருக்கும் பொறுப்புண்டு என்பதை மறந்துவிடலாகாது.

இந்தப் பெறுப்பு ஒரு சமூகப் பொறுப்புள்ள நபரின் எதிர்பார்ப்புக்களை வடிவமைக்கும் நெறிமுறை மற்றும் தார்மீகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

இன்றைய இளைஞர்கள் சமூக நீதி நாளின் உளப்பூர்வமான நோக்கத்தைப் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமானதாகும்.

சமாதானத்தையும், சகிப்புத் தன்மையையும் நம்முள் உருவாக எண்ணுவோம். சமூக நீதியைப் பேணுவோம்.

You May Also Like :
இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி
உலக எழுத்தறிவு தினம்