நடுகல் என்றால் என்ன

nadukal enral enna

நடுகற்கள் என்பவை அந்தந்த கால மரபுகள், அரசர்களின் ஆட்சி, மொழி, கலாச்சாரம், போர் மற்றும் போர் முறைகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது.

இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் சங்க காலம் பற்றிய அழிக்க முடியாத ஆதாரமிக்க ஆவணங்களின் களஞ்சியமாக நடுகற்கள் விளங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாக காணப்படுகிறது.

நடுகல் என்றால் என்ன

நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக ஊன்றி வழிபடப்படும் நினைவுக்கல் ஆகும்.

நடுகற்கள் காலம்

தமிழகத்தில் சங்க காலம் தொட்டே (பொ.ஆ.மு.4காம் நூற்றாண்டு முதல்) வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.

நடுகல் நடும் முறைகள் பற்றி “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர” என தொல்காப்பியம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மேலும் பல சங்க இலக்கியங்களும் நடுகற்களைப் பற்றிக் கூறுகின்றன. இதன் மூலம் நீத்தோர் நினைவாக நடுகற்கள் நடும் மரபு சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளதை அறியமுடிகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் புலிமான்கோம்பையில் (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம்) மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன் காலம் பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமையான நடுக்கற்கள் ஆகும்.

நடுகல் அமைவிடம்

பெரும்பாலும் நடுகற்கள் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. ஊர்களின் நடுவில் நடுகற்கள் மிக குறைவாகவே உள்ளன. ஒரே இடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நடுகற்கள் காணப்படுவதும் உண்டு.

ஓரே போரில் இறந்த பல போர் வீரர்களுக்கும் நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுவதும் உண்டு.

நடுகற்களின் வேறு பெயர்கள்

நடுகற்கள் வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம், தர்மபுரி, மாவட்டங்களில் வேடியப்பன் கல் என்று அழைக்கப்படுகின்றன. இவை இருக்கும் இடத்தை வேடியப்பன் கோயில் என்றும் அழைப்பர்.

“வேடர்”, “கிருஷ்ணாரப்பன்”, “மீனாரப்பன்”, “சன்யாசியப்பன்” என்று பல பெயர்களிலும் நடுகற்கள் அழைக்கப்படுகின்றன. சில இடங்களில் “ஆஞ்சநேயர் கல்லு” என்றும் அழைக்கப்டுவதும் உண்டு.

நடுக்கற்களின் வகைகள்

நடுக்கற்களின் அமைப்பு, உருவங்கள், கருவிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. நினைவு கற்கள்
  2. வீரக் கற்கள்
  3. நவ கண்டம்
  4. அறி கண்டம்
  5. சதி கல்
  6. புலிக்குத்திப்பட்டான் கல்
  7. யானைக்குத்திப்பட்டான் கல்
  8. காட்டுப்பன்றிக் குத்திப்பட்டான் கல்
  9. கோழிக்கற்கள்
  10. ஏறுதழுவல் வீரக் கல்
  11. மான்குத்திப்பட்டான் கல்
  12. பாம்பு பட்டான் கல்

நடுகற்களில் எழுத்துப் பொறிப்புகள்

நடுகற்களில் மன்னனின் ஆட்சியாண்டு, உயிர் நீத்த வீரன் பெயர் அவனைப் பற்றிய செய்திகள், போர், நிரை கொண்டது, நிரை மீட்டது ஆகியவற்றில் எதனால் வீழ்ந்தான் முதலிய செய்திகள் பொறிக்கப்பட்டிருக்கும்.

இது வரை கிடைத்துள்ள நடுகற்களில் பெரும்பாலானவை வட ஆற்காடு மாவட்டம், செங்கம் பகுதியில் கிடைத்துள்ளன. தென்னாற்காடு, செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், கோலை ஆகிய மாவட்டங்களிலும் சில நடுகற்கள் கிடைத்துள்ளன. மதுரை, திருநெல்வேலி மாவட்டஙக்ளிலும் ஒன்றிரண்டு நடுகற்கள் கிடைத்துள்ளன.

சோழ மண்டலத்தில் நடுகற்கள் அதிகம் கிடைக்கவில்லை. இதுவரையில் இப்பகுதிகளில் சங்க கால நடுகற்கள் ஏதுமே கிடைக்கவில்லை.

பல்லவர், பாண்டியர், கங்கர், சோழர், நுளம்பர், போசளர், விஜயநகர மன்னர் ஆகிய அரசரது காலத்து நடுகற்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் இடைக்காலம் தொட்டு பொ.ஆ. 16ஆம் நூற்றாண்டு நடுகற்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் அரிதாகவே கிடைத்துள்ளன.

தற்போழுது, திண்டுக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஒரு சில நடுகற்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

You May Also Like :
பாரதியார் சிறப்பு பெயர்கள்
நம்மாழ்வார் எழுதிய நூல்கள்