இந்தியாவின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடி வெற்றி கண்டு, இந்தியாவின் தேசப்பிதா என அழைக்கப்படுபவரே மகாத்மா காந்தியாவார்.
இந்திய அரசியலின் முன்னோடியாக திகழ்ந்து, அகிம்சை வழியினூடாக மக்களுக்கு தேசப்பற்றினை கொண்டு சேர்த்த காந்தி அவர்கள் இந்தியாவையும் அதில் வாழக்கூடிய மக்களையும் வேறு விதமாக காண விரும்பினார்.
காந்தி காண விரும்பிய இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அகிம்சாவழியில் விடுதலை
- சாதி ஒழிப்பு
- சம உரிமை
- பெண் கல்வி
- முடிவுரை
முன்னுரை
காந்தி இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்தவராவார். அதாவது காந்தியினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு பீகார் மாகாண அரசாங்கம் விடுமுறையை அறிவித்ததை அடுத்து,
காந்தி அவர்கள் இவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தன்னுடைய பிறந்த நாளில் ஆட்டம், பாட்டம் யாவற்றையும் தவிர்த்து நல்ல நூல் நூற்றல் அல்லது தேசிய பற்றோடு சேவை செய்தல் என்பவற்றை ஊக்கப்படுத்துமாறும் தன்னுடைய “அரிஜன்” இதழில் குறிப்பிட்டுள்ளார். இதுக்கு இணங்க காந்தி இந்தியாவை சற்று வித்தியாசமாகவே காண விரும்பினார்.
அகிம்சாவழியில் விடுதலை
வன்முறையே யாவற்றுக்கும் தீர்வாகி விடாது என்பதை இந்திய மக்களுக்கு உணர்த்தி அகிம்சா வழியில் தேசியப்பற்றினை மக்களிடம் வளர்த்து காங்கிரஸ் இயக்கத்தை மாபெரும் விடுதலை இயக்கமாக மாற்றி சுதந்திரப் போராட்டத்திற்கு அயராது உழைத்தவர் காந்தி ஆவார்.
ஒரு நாட்டினுடைய விடுதலையையே சத்தியம், நேர்மை, அகிம்சை ஆகிய வழிகளின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமாயின், நாட்டுக்குள் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இவ்வாறான நல்வழிகளின் மூலம் மாற்றி அமைக்கலாம் என்பதை இந்திய மக்களுக்கு உணர்த்தி, மக்களையும் அவ்வாறான நேர்வழியில் மாற்றி அமைக்க விரும்பினார் காந்தி.
சாதி ஒழிப்பு
காந்தி கண விரும்பிய இந்தியாவானது முற்றிலும் சாதி, பேதங்கள் இன்றி காணப்பட வேண்டும் என்பதே அவரது அவாவாகும். மற்றும் சாதி, வரதட்சணை என்பது ஒன்றோடு ஒன்று இணைந்த அங்கமாகவே காணப்படுகின்றன. அதனால் வரதட்சணையை ஒழிப்பதன் மூலம் இந்த சாதியை ஒழிக்க முடியும் என காந்தி குறிப்பிட்டார்.
அதன்படி வரதட்சணை கேட்கும் ஆண்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதோடு வரதட்சணை கொடுமைகளை ஒழிப்பதற்காக சாதி மறுப்பு திருமணங்களும் அதிக அளவில் நடைபெற வேண்டும் எனவும் காந்தி கருதினார். இவ்வாறாக காந்தி சாதிகள் அற்ற ஓர் இந்தியாவை காண விரும்பினார்.
சம உரிமை
ஆண், பெண் ஆகிய இருபாலாறும் சமமானவர்கள் இவர்கள் சமமாகத் தான் நடத்தப்பட வேண்டும் என்பது காந்தியின் கருத்தாகும். அதன்படி இச்சமூகம் பின்பற்றக்கூடிய சட்ட திட்டங்கள், கலாச்சாரங்கள் ஆகிய அனைத்துமே ஆண்களை மட்டும் உள்ளடக்கியதாகவும், பெண்களை அடக்கி ஒடுக்குவதாகவும் காணப்படுவதனால் இவற்றை மறுத்து ஆண்களும் பெண்களும் சேர்ந்து செயல்பட வேண்டும் எனவும், ஆண்களின் அடிமைகள் அல்ல பெண்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் காந்தி தெளிவு படுத்தினார்.
இதன் மூலம் தான் காண விரும்பிய இந்தியாவில் சம உரிமை, சமத்துவம் பேணப்பட வேண்டும் என காந்தி விரும்பினார்.
பெண் கல்வி
இந்தச் சமூகத்தில் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்கான காரணம் அவர்களது கல்வி அறிவு இனிமையே என்பதை தெளிவுபடுத்திய காந்திய அவர்கள் பெண்களுக்கான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, அக்கல்வியானது வெறும் ஏட்டளவில் நின்று விடாமல் நம்பிக்கையையும், தைரியத்தையும் பெண்களிடத்தில் வளர்க்க வேண்டும் எனவும் காந்தி கருதினார்.
இதன் மூலமாக தான் காண விரும்பிய இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக கல்வி கற்ற பெண்களையே காண விரும்பினார்.
முடிவுரை
தற்கால மாணவர்களுக்கு காந்தியின் வரலாறு ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆகவே அவரது வாழ்க்கை எமக்கு ஒரு முன்னுதாரணமாகவும், எமது வாழ்க்கைக்கான உந்துதலாகவும் காணப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.
சத்தியம், நீதி, நேர்மை, பெண் கல்வி, சம உரிமை, சாதி ஒழிப்பு மற்றும் சுய ஒழுக்கம் ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு திடமான இந்தியாவையே காண விரும்பினார். காந்தி காண விரும்பிய இந்தியாவை நடைமுறைப்படுத்த வேண்டியது எம் அனைவரதும் கடமையும், பொறுப்பும் ஆகும்.
You May Also Like: